அல்லாஹ்வின் திருப்பெயரால்......
நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்.. ''ஆதமுடைய மகனின் அனைத்து நற்செயலுக்கும் பத்திலிருந்து இரட்டிப்பான எழுநூறு மடங்குவரை நன்மையளிக்கப்படும். அல்லாஹ் கூறுகிறான்.. 'நோன்பைத் தவிர, அது எனக்குரியது. நானே அதற்கு கூலிக் கொடுக்கிறேன். அவன் மனோ இச்சையையும் உணவையும் எனக்காகவே விலக்கினான் .
உண்மை முஸ்லிம் ரமழான் மாதத்தில் ஈமானுடனும் நன்மையை நாடியும் நோன்பு நோற்க வேண்டும்.
நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்.. ''எவர் ஈமானுடனும் நன்மையை நாடியும் ரமழானில் நோன்பு நோற்கிறாரோ அவரது முந்திய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும்.
நூல் ..ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம் ]
அவர் நோன்பின் மாண்புகளைப் புரிந்து நோன்புக்கு பொறுத்த மற்ற, நன்மையை அழித்துவிடும்படியான அனைத்து தவறுகளிலிருந்து தனது நாவு, கண் மற்றும் அனைத்து உறுப்புகளையும் பாதுகாத்து கொள்வார்.
நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்.. ''உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருந்தால் அருவருப்பான பேச்சுக்களைப் பேசவேண்டாம், கூச்சலிட வேண்டாம். எவரேனும் திட்டினால் அல்லது சண்டையிட்டால் 'நான் நோன்பாளி என்று அவர் கூறட்டும்.''
நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்.. 'எவர் பாவமான சொல், செயலிலிருந்து விலகிக்கொள்ளவில்லையோ அவர் உணவு, பானத்தைத் தவிர்ப்பதில் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தேவையுமில்லை.
[ஸஹீஹுல் புகாரி]
நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உண்டு நோன்பு திறக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சி,, மறுமையில் தனது இறைவனை சந்திக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சி.
நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாசத்தைவிட மணமிக்கது '' என நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்.
[ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம் ]
இதனால் மார்க்கப் பற்றுள்ள முஸ்லிம் பரக்கத் பொருந்திய ரமலான் மாதத்தின் நேரங்களை பொன்னாகக் கருதி அதன் பகல் காலங்களில் நோன்பு, தொழுகை, குர்ஆன் ஓதுதல், தர்மம் செய்தல் போன்ற நற்காரியங்களிலும் இரவுகளில் தஹஜ்ஜத் தொழுகை மற்றும் துஆவிலும் ஈடுபடவேண்டும்.
நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்.. ''எவர் ரமழான் மாதத்தில் ஈமானுடனும் நன்மையை நாடியும் நின்று வணங்குகிறாரோ அவரது முன் பாவங்கள் அனைத்து மன்னிக்கப்படும்.
[ஸஹீஹுல் புகாரி]
நபி [ஸல்] அவர்கள் ரமழானில் மற்ற காலங்களைவிட மிக அதிகமாக வணக்கம் புரிபவர்களாக இருந்தார்கள். அதிலும் ரமளானின் இறுதிப் பத்தில் மிக அதிகமாக வணக்கம் புரிந்து வந்தார்கள்.
அன்னை ஆயிஷா [ரலி] அவர்கள் அறிவிப்பதாவது.. 'நபி [ஸல்] அவர்கள் மற்ற மாதங்களைவிட ரமழானில் அதிகமாக அமல் செய்வார்கள். குறிப்பாக ரமழானில் ஏனைய நாட்களைவிட பிந்திய பத்து நாட்களில் அதிகம் அமல் செய்வார்கள் .
[ஸஹீஹ் முஸ்லிம் ]
அன்னை ஆயிஷா [ரலி] அவர்கள் கூறினார்கள்.. ''நபி [ஸல்] அவர்கள் ரமழானின் கடைசிப் பத்தில் நுழைந்துவிட்டால் முழு இரவும் வணங்குவார்கள் , குடும்பத்தினரையும் விழிக்கச் செய்வார்கள். தங்களது ஆடையை இருக்கக் கட்டி உற்சாகத்துடன் வணக்கத்தில் ஈடுபடுவார்கள்.
[ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம் ]
நபி [ஸல்] அவர்கள் லைலத்துல் கத்ரைத் தேடுமாறு ஏவுவார்கள். ''ரமழானின் கடைசிப் பத்தில் லைலத்துல் கத்ரைத் தேடிக் கொள்ளுங்கள்!''
[ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம் ]
என்று கூறி அந்த இரவில் நின்று வணங்க ஆர்வமூட்டுவார்கள். மேலும் கூறினார்கள்.. '' ரமழானின் கடைசி பத்தில் ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரை தேடிக்கொள்ளுங்கள்.''
[ஸஹீஹுல் புகாரி]
மேலும் கூறினார்கள்.. ''எவர் லைலத்துல் கத்ர் இரவில் ஈமானுடனுன் நன்மையை நாடியும் நின்று வணங்குவாரோ அவரது முன்பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும்.
[ஸஹீஹ் முஸ்லிம் ]
இதனால்தான் மகத்துவமிக்க இம்மாதம் தூய்மையான வணக்கங்கள் புரிவதற்கு ஏற்ற மாதமாகத் திகழ்கிறது. இரவுகளில் வீண் விளையாட்டுகளில் ஈடுபட்டு நீண்ட நேரம் விழித்திருந்து விட்டு, ஃபஜ்ர் நேரம் உதயமாவதற்கு சற்றுமுன் சில கவளங்களை சாப்பிட்டுவிட்டு, படுக்கைக்குச் சென்று ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கி, ஃபஜ்ரு தொழுகையைத் தவறவிடுவது முஸ்லிமுக்கு சற்றும் பொருத்தமற்ற செயலாகும்.
இறையச்சமுள்ள மார்க்க நெறிகளை அறிந்த முஸ்லிம் தராவீஹ் தொழுகையை முடித்துவிட்டால் விழித்திருக்காது உறங்கச் செல்ல வேண்டும். சிறிது நேர தூக்கத்திற்கு பிறகு இரவு தொழுகைக்காக எழுந்து தொழுதுவிட்டு ஸஹருடைய உணவை உண்ண வேண்டும். பின்னர் ஃபஜ்ர் தொழுகையை நிறைவேற்ற பள்ளியை நோக்கிச் செல்ல வேண்டும்.
ஸஹர் உணவில் மிக அதிகமாக நன்மைகள் இருப்பதால் நபி [ஸல்] அவர்கள் அதை வலியுறுத்தி ''ஸஹர் செய்யுங்கள்! நிச்சயமாக ஸஹர் உணவில் பரக்கத் இருக்கிறது'' என்று கூறினார்கள்.
[ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம் ]
காரணம் என்னவெனில் , ஸஹர் நேரத்தில் விழித்தெழுவது இரவில் நின்று வணங்க வாய்ப்பை ஏற்படுத்தும். ஃபஜ்ர் தொழுகையை ஜமாஅத்துடன் நிறைவேற்றுவதற்காக உற்சாகத்துடன் பள்ளியை நோக்கி நடக்கத்ச் செய்வதுடன், நோன்பு நோற்க உடல் வலிமையையும் தருகிறது. இதை நபி [ஸல்] அவர்கள் தானும் செய்து தனது தோழர்களுக்கும் பயிற்சியளித்தார்கள் .
ஜைது இப்னு ஸாபித் [ரலி] அவர்கள் ''நாங்கள் நபி [ஸல்] அவர்களுடன் ஸஹர் உணவை உண்டோம். பிறகு தொழுகைக்கு சென்றோம்'' என்று கூறினார்கள். ஒருவர் ''அந்த இரண்டுக்கும் மத்தியில் எவ்வளவு நேரம் [இடைவெளி] இருந்தது? என்று கேட்டார். ''50 ஆபத்துக்கள் [ஓதும் நேரம்] என ஜைது [ரலி] பதிலளித்தார்கள்.
[ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம் ]
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
இன்ஷாஅல்லாஹ் அடுத்த தலைப்பில் '' சுன்னத்தான மற்றும் நஃபிலான நோன்பைப் பற்றி பார்ப்போம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
welcome to your comment...........!!!