முஸ்லிம் தனது சகோதரர்கள் , நண்பர்களுடன்

அல்லாஹ்வின் திருப்பெயரால்...
முஸ்லிம் தனது சகோதரர்கள் , நண்பர்களுடன் .........

அல்லாஹ்வுக்காக நேசிப்பார்....
தனது சகோதரர்களையும் நண்பர்களையும் சுயநலமற்ற நேசித்து, எவ்வித எதிர்பார்ப்புமின்றி தூய அன்பு கொள்வது உண்மை முஸ்லிமின் தனித்தன்மையான பண்புகளில் ஒன்றாகும். இஸ்லாம் உண்மையான சகோதரத்துவ அமைப்பாகும். இது அல்லாஹ், அவனது தூதரால் மனித உறவில் ஏற்படுத்தப்பட்ட சங்கிலிப் பிணைப்பாகும். மனித வரலாற்றில் சகோதரத்துவத்தைப்  பேணுவதில் இஸ்லாம் மட்டுமே தனித்து நிற்கிறது.

ஒருவரது இனம் , மொழி, நிறம் போன்ற பேதமைகளுக்கு அப்பாற்பட்டு  ''லா இலாஹ இல்லல்லாஹ்'' என்ற திருக்கலிமாவின் கீழ் இஸ்லாம் மனிதர்களை சகோதரத்துவத்தால் பிணைக்கிறது.

விசுவாசிகள் [யாவரும்] நிச்சயமாக சகோதரர்களே ! [அல்குர் ஆன் 49..10]

ஈமானிய சகோதரத்துவம் இதயங்களை இணைப்பதில் மிக உறுதியானதாகும் . அது ஆன்மாவையும் அறிவையும் இணைக்கிறது.


இந்தச் சகோதரத்துவம் உன்னதமான ஏற்பாடாகும். இதற்கு இஸ்லாம்  'அல்லாஹ்வுக்காக நேசித்தல்' என்று பெயரிடுகிறது. இதில்தான் உண்மை முஸ்லிம்  ஈமானின் இன்பத்தைப் பெற்றுக் கொள்கிறார்.

அல்லாஹ்வின் தூதர் [ஸல்] அவர்கள் கூறினார்கள்.. ''எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்துள்ளதோ  அவர் ஈமானின் சுவையை உணர்ந்தவராவார்.. 1. அல்லாஹ்வும் அவனது தூதரும் அவருக்கு மற்றெதையும் விட அதிக நேசத்திற்குரியவர்களாக இருப்பது, 2. ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது, 3. நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பதுபோல் இறைநிராகரிப்புக்குத் திரும்பிச் செல்வதை வெறுப்பதுமாகும்.''
நூல்கள்.. ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம் ]

அல்லாஹ்வுக்காக நேசிப்பவர்களின்  அந்தஸ்து....
அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு நேசித்துக் கொள்பவர்களுக்கு அல்லாஹ் சுவனத்தில் தயார் செய்து வைத்திருக்கும் அருட்கொடைகள் மற்றும் மறுமை நாளில் அவர்களுக்கு அல்லாஹ் வழங்கவிருக்கும் உன்னத அந்தஸ்து பற்றியும் விவரித்துக் கூறும் அநேக நபிமொழிகள் உள்ளன.

இது விஷயத்தில் அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறெந்த நிழலும் இல்லாத நாளில் அல்லாஹ் நிழல் தரும் ஏழு நபர்களைப்  பற்றி நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்..  ''1.நீதமான அரசன் 2. அல்லாஹ்வின் வணக்கத்தில் ஈடுபட்ட வாலிபர் 3. இதயத்தால் மஸ்ஜிதுடன்  இணைந்திருக்கும் மனிதர் 4. அல்லாஹ்வுக்காகவே ஒன்று சேர்ந்திருந்தார்கள் ,, அல்லாஹ்வுக்காகவே பிரிந்தார்கள் 5. ஒரு மனிதர், அவரை அழகும் வனப்புமுடைய பெண் அழைத்தாள் ,, அவர்  ''நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்'' என்று கூறி [மறுத்து[ விட்டார். 6. வலது கரம் செய்த தர்மத்தை இடது கரம் அறியாத வகையில் தர்மம் செய்தவர்  7. தனிமையில் அல்லாஹ்வை திக்ரு செய்து, கண்ணீர் வடிக்கும் மனிதர்.''
நூல்கள்... ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம் ]

அல்லாஹ்வின் நிழல் மட்டுமே உள்ள மறுமை நாளில் அந்த நிழலுக்காக தேர்ந்தெடுக்கப்படுபவர்களில் அல்லாஹ்வுக்காக நேசிப்பவர்களுக்கும்  இடமுண்டு என்பதிலிருந்து அவர்களுக்கு எவ்வளவு பெரிய  கெளரவம் உண்டு என்று தெரிந்து கொள்ளலாம்.

அல்லாஹ்வுக்காகவே நேசிப்பவர்களை சிறப்பித்துக் கூறும் முகமாக மஹ்ஷர் மைதானத்தில் அல்லாஹ் கூறுவான்  .. ''என்னுடைய மகத்துவத்துக்காக தங்களிடையே நேசித்துக் கொண்டவர்கள் எங்கே? என்னுடைய நிழலைத் தவிர வேறெந்த நிழலும் இல்லாத இன்றைய நாளில் என்னுடைய நிழலில் அவர்களுக்கு இடமளிக்கிறேன்.
[ஸஹீஹ் முஸ்லிம் ]

துன்பமும், துயரமும், சிரமங்களும் நிறைந்த கடுமையான நாளில் அல்லாஹ்வுக்காகவே நேசித்தவர்களுக்குக் கிடைக்கும் அல்லாஹ்வின்  பேரருள் எவ்வளவு மகத்தானது!
இன்ஷாஅல்லாஹ் இன்னும் தொடரும்......
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.

கருத்துகள்