அல்லாஹ்வின் திருப்பெயரால்.........
மார்க்கத்தின் நெறிகளைப் பேணிக்கொள்ளும் முஸ்லிம் , ஹஜ்ஜூக்குச் சென்றுவரும் வசதியைப் பெற்றிருந்தால் அதன் மீது தனது கவனத்தைச் செலுத்த வேண்டும். அந்தப் பரிசுத்த ஆலயத்துக்குச் செல்லும்முன் ஹஜ்ஜின் சிறிய, பெரிய அனைத்து சட்டங்களையும் முழுமையாக அறிந்து, இந்த மகத்தான கடமையின் தத்துவமென்ன என்று விளங்கி அதன் கிரியைகளைப் பூரணமாக நிறைவேற்ற வேண்டும். அப்போதுதான் மனதின் சலனங்களிலிருந்து அகன்று, ஈமானின் நிம்மதியைப் பெற்று, இஸ்லாமின் மறுமலர்ச்சியை உணர்ந்து கொள்வார்.
இந்த அங்கீகரிக்கப்பட்ட ஹஜ்ஜை நிறைவு செய்துவிட்டு தனது ஊர் மற்றும் குடும்பத்தினரிடம் திரும்புகிறவர் அவரின் தாய் அவரை பெற்றெடுத்த தினத்தில் இருந்ததுபோல் பாவங்கள் நீங்கியவராக திரும்புகிறார். பைத்துல்லாஹ்வை மையமாகக்கொண்டு உலகின் அனைத்து முஸ்லிம்களையும் ஒன்றிணைத்து மகத்தான மார்க்கத்தின் மாண்புகளைப் புரிந்து, தனது இதயத்தை ஈமானால் நிரப்புகிறார்.
ஏனெனில் ஹஜ் என்பது முஸ்லிம்களின் உலகளாவிய மாநாடாகும். ஹஜ்ஜைத் தவிர வேறு எங்கும் இம்மாதிரியான மாநாட்டை உலகம் கண்டிராது. ஹாஜிகள் பல்வேறு இனம், நிறம், மொழியுடையவர்களாக இருந்தும் எவ்வித ஏற்றத் தாழ்வுமின்றி மிகப் பெரியவனான ஏக இறைவனாம் அல்லாஹ்வைப் புகழ்ந்து தஸ்பீஹ், தக்பீர், தஹ்ளீல் மற்றும் தல்பியாவை முழங்குகிறார்கள் .
நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் நவின்றார்கள்.. ''ஹஜ் செய்ய நாடுபவன் சீக்கிரம் சீக்கிரமாக செய்திட வேண்டும். ஏனெனில் அவன் நோயுற்று விடவும் கூடும்,, ஒட்டகம் தொலைந்துவிடவும் கூடும்,, [அதாவது, பயணத்திற்கான வழிவகைகள் அடைப்பட்டுப் போய்விடும் கூடும், பாதை அபாயகரமானதாகி விடக்கூடும்]
மேலும் ஹஜ் பயணத்திற்கான செலவுத்தொகை தீர்ந்துவிடக் கூடும்,, அல்லது ஹஜ் பயணம் சாத்தியமாகாத அளவுக்கு வேறு ஏதாவது தேவை ஏற்பட்டுவிடக் கூடும். [எனவே விரைந்து ஹஜ்ஜை நிறைவேற்றுங்கள்! ஹஜ்ஜை நிறைவேற்றாமல், இறை ஆலயத்தை தரிசிக்க முடியாது போகும் கடினமான சூழ்நிலை ஏற்படலாமே !]
நூல்.. இப்னுமாஜா]
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
இன்ஷாஅல்லாஹ் அடுத்த தலைப்பு.. '' அல்லாஹ்விடம் அடிமைத்தனத்தை வெளிப்படுத்துவார்''
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
welcome to your comment...........!!!